சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு அவசர முறையீடு செய்தது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அதில் கலந்துகொள்ளாத ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்து, அங்கு போடப்பட்டிருந்த  பூட்டை உடைத்து உள்ளே சென்றார். இதனால், அங்கிருந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து, அதிமுக அலுவலத்தினுள் சென்ற ஓபிஎஸ், அங்குள்ள ஆவணங்கள் அனைத்தையும், தங்களது வாகனங்களில் ஏற்றினர். இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  அதன்பிறகு, வருவாய்த்துறையினர், காவல்துறையினர் வந்து, அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்த விவகாரம் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில்,அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயணன் ஆஜராகி உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு முறையிட்டார். இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்து உள்ளார்.

இபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!