டில்லி,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களும் இனி மருத்துவ பயன் அடைவார்கள் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாத்தின் போது ஆர் எஸ் பி உறுப்பினர் பிரேம்சந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது,   ஊழியர் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ஓய்வூதி்யர்களுக்கு மருத்துவ பயன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் 58 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள் என்றும் தத்தாத்ரேயா கூறினார்.

ஓய்வூதியதாரர்களுக்கு குறைவான ஊதியம்தான் கிடைக்கிறது. இதனால் மருத்துவ வசதிகளை அவர்கள் பெறமுடியாமல் போவதாக தெரிவித்த அவர், பயனாளர்களிடமிருந்து மாதந்தோறும் பிரீமியமாக ரூ.200 மட்டும்  பிடிக்கப்படும் என்றார்.

மேலும் அவர், வியாழக்கிழமையன்று  ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்புடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஓய்வூதியர்களுக்கான இத்திட்டத்தை அது ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.