லண்டன்: பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, ஓராண்டு தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விளையாட வந்துவிட்டாலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் இங்கிலாந்து விளையாட்டு வீரர் மொயின் அலி ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததையும் மீறி, கேலி கிண்டலில் ஈடுபட்டனர் இங்கிலாந்து ரசிகர்கள்.

உப்புக் காகிதத்தில் உடையணிந்து அவர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரையும் கிண்டலடித்தனர். ஆனாலும், ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தக் கிண்டல்களை பொருட்படுத்தாமல், அந்த இருவரும் சிறப்பாக ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி கிரிக்கெட்டில் சூடான எதிரணிகளோ, அதுபோலதான் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்.