நிச்சயதார்த்தத்திற்கே… தங்கச்சங்கிலியோடு மாப்பிள்ளை ஓட்டம்..

தேனாம்பேட்டையைச்சேர்ந்த தனியார் டிராவல் கம்பெனியில் பணிபுரியும் பெண் ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் வெப் சைட் மூலம் தனக்கு மணமகனைத் தேடியபோது அறிமுகமானவர் சூரியா கணேஷ்.  தொடர்ந்த பேச்சு வார்த்தைகளுக்குப்பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு தடையாக வந்து விடத் திருமணம் தள்ளிப்போயுள்ளது.

எனினும் இந்த ஊரடங்கின் போது போனில் தொடர்ந்த பேச்சு வார்த்தை வீடியோ காலிங் வரை  சென்றுள்ளது.  ஞாயிறன்று அப்பெண்ணை டி. நகருக்கு ஷாப்பிங் அழைத்துச்சென்றுள்ளார் சூரியா கணேஷ்.  அங்கே ஒரு பியூட்டி பார்லருக்கு பேசியல் பண்ண சென்றுள்ளனர் இருவரும்.  அப்போது அப்பெண்ணிடம் பேசியல்  பண்ண இடைஞ்சலாக இருக்குமென்று கூறி கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியைக் கழட்டித்தருமாறு கேட்டுள்ளார்.  அப்பெண்ணும் கழட்டிக் கொடுத்துவிட்டு பேசியல் முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது சூரியா கணேஷ் அங்கே இல்லை.  போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எங்குத் தேடியும் கிடைக்காமல் போக, கடைசியில் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் பாண்டி பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சூரியா கணேஷை தேடி வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா