சென்னை: பாரதி ராஜாவின் “என் உயிர் தோழன்” பட நடிகர் பாபு காலமானார். அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார்.  நடிகர் பாபு  படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்திற்கு பின் கடந்த  30ஆண்டுகளாக படுக்கையிலேயே  சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் பாரதிராஜா இயக்கத்தில் , இளையராஜா இசையில்  1990ம் ஆண்டு  வெளிவந்த படம் என் உயிர் தோழன். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாபு.  இந்த படத்திற்கு  பாரதிராஜாவுடன் இணைந்து கதையும், தனியாக வசனத்தையும் எழுதியவர். நடிகர் பாபு மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் க.இராஜாராம் சகோதரியின் மகன் பாபு.

இந்த படத்தில்,  ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டனது வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்பதை அசால்டாக நடித்து தனது திறமையை பறை சாற்றி யிருந்தார்.  இந்த படத்தில் நடிகர் பாபுவின் நடிப்பு அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், அதன்பிறகு அவர் நடித்த பல படங்களால் தோல்வியை சந்தித்தது. இதனால் ராசியில்லாத நடிகராக மாறிய பாபு, கடைசியாக மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்த போது, மேலே இருந்த குதிக்கும் ஒரு காட்சியில் டூப் இல்லாமல் அவரே நடித்தபோது,  குறிப்பிட்ட இடத்தில் குதிக்காமல், தவறுதலாக விழுந்ததால்,  முதுகெலும்பில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்தாலும், அவரால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது வாழ்க்கையே  படுக்கையானது. பாவுவை அவரது  சகோதரி  கவனித்து வந்த நிலையில், நேற்று இரவு மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இரங்கல் பதிவிட்டுள்ள இயக்குனர் பாரதி ராஜா,  திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ” என் உயிர் தோழன் பாபு ” வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.