டில்லி

த்திய அரசின் ஆதரவு சட்ட விவகாரத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு அளித்துள்ளார்.

டில்லியில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த மே மாதம் 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த விவகாரத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

இச்சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநில தலைவர்களைச் சந்திக்க கெஜ்ரிவால் முடிவு செய்து, அதன்படி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்குக் கடந்த மே 23-ந்தேதி சென்று, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மற்றும் ஆம் ஆத்மியின் பிற தலைவர்களும் சென்றிருந்தனர்.

மேலும் முன்னாள் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு திரட்டி உள்ளார்.

இன்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவை லக்னோ நகரில், கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, டில்லி அவசரச் சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.