புதுடெல்லி:
18 மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் மார்ச் மாதம் நடத்த வேண்டிய மாநிலங்களவை தேர்தல் தள்ளிப்போனது.தற்போது மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருவதால் தேர்தல் நடத்தவும் அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோர் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்.,2-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் அன்று மாலை 5மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஜூன் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும் ஜூன் 19ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும். அதேபோல் அன்று மாலை 5 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.