டில்லி

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10% இட ஒதுக்கீட்டு சட்டத்தின் எதிரொலியாக கல்வி நிறுவனங்களில் மேலும் 20% இடம் அதிகரிக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

 

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக 10% இட ஒதுக்கீடு அளிக்க சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவையிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அதை ஒட்டி இந்த சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டம் கல்வி நிறுவனங்களில் உடனடியாக அமுலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதனால் இட ஒதுக்கீட்டு இருக்க்கைகள் அதிகரிக்கப்பட்டு ஏற்கனவே உள்ள பொதுப் பிரிவுக்கான மாணவர் இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் 10% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வசதியாக மொத்தமுள்ள மாணவர்கள் எண்ணிக்கையில் 25% அதிகரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து கல்வி ஆர்வலர் ஒருவர் அதாவது இந்த கோரிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டால் ஒரு மூன்று வருட பட்டப் படிப்பில் ஒவ்வொரு வருடமும் 8% இடம் அதிகரிக்க வேண்டி இருக்கும். அதுவே 4 வருட படிப்பில் ஒவ்வொரு வருடமும் 6% இடங்கள் அதிகரிக்க வேண்டி வரும்.” என தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் இருந்து இது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

அரசின் இந்த புதிய இட ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தவிர மற்ற அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வர உள்ளன. ஆனால் அரசு கல்வி நிறுவனத்தில் இந்த இட ஒதுக்கீட்ட அமல் படுத்துவதாக அறிவித்த மத்திய அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.