சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவில் இபிஎஸ்,ஓபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதையடுத்து, இன்று மீண்டும்  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்,  சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்பதை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நீண்ட நேரமாக நடைபெற்றது. அப்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவியதாக தவல்கள் வெளியானது.  இதற்கிடையில் அதிமுக அலுவலகம் வெளியே அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.