சென்னை: சென்னையில்  இன்று 47 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வரும் நிலையில், அதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடைபெற வில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்ட விரோதமாக பணபரிமாற்றம் தொடர்பாக இன்று சென்னையில், 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில்  உள்ள இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் {IFS}என்ற கம்பெனி தொடர்பாக தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி கள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரிடம் பணத்தை வசூல் செய்துள்ளது.

ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மாதம் 8ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி பல பேரிடம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது இதன்  தொடர்பாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக லட்சுமி நாராயணன் மற்றும் வேத நாராயணன் சகோதரர்கள் உள்ளனர். மேலும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   சென்னை நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள கார் பைனான்சியர் ரமேஷ் டக்கார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,  எழும்பூரில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் உட்பட சென்னையில் சில இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது இதனையடுத்து அவர் வீடு முன்பாக ஏராளமான பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். ஆனால் அங்கு சோதனை எதுவும் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்ததையடுத்து பத்திரிக்கை யாளர்கள் திரும்பி சென்றனர்.

இதே போல  தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டது ஆனால் இந்த தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.