சென்னை: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்துள்ள நிலையில், சில இடங்களில் அதற்காக பணம் வசூலிக்கப்படு வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மின்வாரிய அலுவலகம் மற்றும் சிறப்பு முகாம்களில் ஆதாரை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அறிவுறுத்தி உள்ள தமிழகஅரசு, அதற்காக நேற்று முதல் தமிழகம் முழுவதும்  சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. ந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவியின்படி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இணைப்பு பணியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் மாற்று கணினியை தயாராக வைத்திருக்க வேண்டும். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த நுகர்வோர்களின் எண்ணிக்கை 19,35,867, ஆன்லைன் மூலமாக இணைத்த நுகர்வோர்கள் 15, 98, 413, மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று இணைத்தவர்கள் 3, 37, 454 பேர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.