சென்னை: இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தையும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை, விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை  தொடங்கி வைத்தார்.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இச்செயலியின் மூலம், வேளாண்மைப் பொறியியல் துறையின் செய்திகள், திட்டங்களை விவசாயிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும், விவசாயப் பெருமக்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இச்செயலியின் மூலம் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு நிவர்த்தி செய்துகொள்ளவும் இயலும்.

மேலும், ரூ.50.73 கோடி மானியத்தில், விவசாயிகளுக்கு 2118 வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்குதல், 230 வட்டார, கிராம மற்றும் கரும்பு சாகுபடிக்கேற்ற வாடகை மையங்கள் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், பதிவுசெய்யப்பட்ட விவசாய சங்கங்கள்,

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் நிறுவுதல் போன்ற வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கிவைத்து, ஐந்து விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம், வேளாண்மையில் இயந்திரங்கள், கருவிகளின் பயன்பாட்டின் அவசியத்தை உணர்ந்து, வேளாண் பணிகளை குறித்த நேரத்தில் மேற்கொள்ளவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், பயிர் சாகுபடி செலவினைக் குறைக்கவும், நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை மேம்படுத்திடவும், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் வழங்கும் திட்டம் மற்றும் விவசாயிகள் தங்கள் வருவாயை அதிகரிக்கவும், இளைஞர்களை விவசாயத் தொழிலில் ஈர்த்திடவும், விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், தொழில்முனைவோர், பதிவுசெய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் வாடகை மையம் அமைக்கும் திட்டங்கள் மத்திய, மாநில அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், நெல் நாற்று நடும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் கட்டு கட்டும் கருவி, ரோட்டவேட்டர், கரும்பு சோகை துகளாக்கும் கருவி, தென்னை ஓலை துகளாக்கும் கருவி, டிராக்டர் டிரெய்லர்கள், விசைக்களையெடுப்பான், புதர் அகற்றும் கருவி, தட்டை வெட்டும் கருவி, தெளிப்பான் போன்ற வேளாண் இயந்திரங்கள், கருவிகள் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 விழுக்காடுமானியத்திலும் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் www.agrimachinery.nic.inஇல் என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து உரிய மானியம் பெறலாம்.