டெல்லி: தமிழ்நாடு மற்றம் புதுச்சேரிக்கு வருகை தரும், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என சிவில் விமான போக்குவரத்து துறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதையடுத்து, வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பல புதிய வழிகாட்டு நெறிமுறையை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளி மாநில விமான பயணிகளுக்கு இ- பாஸ் கட்டாயம் எனவும் உள்நாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் & கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல கேரளாவில் இருந்து வரும் பயணிகள் முழு தடுப்பு சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.