கமதாபாத்

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குஜராத் மாநிலத்தில் 8 முக்கிய நகரங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.

தற்போது இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்  இந்த பாதிப்பு குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால் அங்குள்ள முக்கிய நகரங்களான அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜூனாகார்க் ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த 8 நகரங்களிலும் ஒமிக்ரான் பாதிப்பும், கொரோனா பாதிப்பும் மெல்ல அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கையாக இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வாரத்தின் இறுதி நாட்களில் மட்டும் இருந்து, தற்போது வரும் 31ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.   ஆனால் இரவு 12 மணி வரை அனைத்து வர்த்தகங்களும் நடக்க அனுமதி உண்டு.  உணவு விடுதிகள், உணவகங்களில் 75 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் 400 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 1 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊடரங்கு பிறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் யாரும் வெளியே வரத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மருத்துவக் காரணங்கள், அவசரத் தேவைக்கு மட்டும் இந்த நேரத்தில் மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா 2வது அலைக்குப்பின், குஜராத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பிறமாநிலங்களில் இருந்தாலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. குஜராத்தில் கடந்த 8மாதங்களுக்குப்பின் ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.