சென்னை

தற்போது சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை நகரில் பல இடங்களில் தற்போது மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன   அதையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்த தகவல்கள் பின்வருமாறு : 

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாகச் செயல்படுத்தப்படும். 

இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் , உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டா் எம்.ஜி.ஆர். சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை – ஒரு வழிப்பாதை). 

அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (ஏற்கனவே உள்ளபடி). 

வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலை பிள்ளை சாலை, G.N. செட்டி சாலை வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம். 

மற்ற பிற உள்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்திற்குத் தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்” 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.