டில்லி

ற்பத்தி  பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் சமையலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து உள்ளது.  தக்காளி விலையைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அரசு சார்பில் பல மாநிலங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டில்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதால் விலை சீராக இருந்து வந்தது.  தற்போது தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

எனவே உற்பத்தி மற்றும் வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து பல இடங்களில் வரலாறு காணாத உச்சத்தில் விலை உள்ளது. டில்லியில் பல பகுதிகளிலும் சராசரியாக தக்காளி ஒரு கிலோ ரூ.203 வரை விற்கப்படுவதாக மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர்,

‘நாடு முழுவதும் காலநிலை மாறுபாடுகள் காரணமாகக் கடந்த 2 மாதங்களாகத் தக்காளி வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தக்காளியின் வரத்து குறைவால் மொத்த விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஆகவே சில்லறை விலையும் அதிகரித்து இருக்கிறது’

எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தையான டெல்லி ஆசாத்பூரில் ரூ.170 முதல் ரூ.220 வரை தக்காளி விற்கப்பட்டது. ஆசாத்பூர் தக்காளி சங்கத்தலைவர் அசோக் கவுசிக், ‘கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்து உள்ளது. எனினும் அடுத்த 10 நாட்களில் இந்த நிலை மேம்படும்’ என்றார்.

நேற்று ஆசாத்பூர் சந்தைக்கு வெறும் 15 சதவீதம் அளவுக்குத் தக்காளி வரத்து இருந்தது. இது குறித்து விற்பனையாளர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெறும் 6 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்ததாகத் தெரிவித்தனர்.