சென்னை

ற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனாலும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்து வரும் 4 தினங்களுக்கு (இன்று முதல் 3-ந் தேதி வரை) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், நாளை (01-12-2023) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தாழ்வு மண்டலம் நீடிக்கும் என்பதால், நாளை மறுதினமும் (02-12-2023), அதற்கு அடுத்த நாளும் (03-12-2023) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், அதற்கு மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.