சிம்லா

தொடர் மழை காரணமாக இமாசலப்பிரதேசத்தீல் இதுவரை 72 பேர் உயிரிழந்து சுமார்  ரூ. 10000 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. இந்த பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டி வருகிறது. இங்கு இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

தலைநகர் சிம்லாவில் திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவில் இடிந்து விழுந்தது. மேலும் பாக்லி பகுதியில் பல வீடுகள் மண்ணோடு புதைந்தன. எனவே மாநிலம் முழுவதும் 3 நாட்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் மழை பாதிப்புக்குப் பலியானார்கள்.

நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது. மீட்பு பணிகளும்      மழைக்கு நடுவே நடந்து வருகின்றன. நேற்று பகல் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்ந்து 72 ஆக உயர்ந்துள்ளது.

சிம்லாவில் சம்மர்ஹில் கோவில் இடிபாட்டில் சிக்கிய மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. சம்மர்ஹில் பகுதியில் இறந்த 14 பேரின் உடல்களும், பாக்லி பகுதியில் 5 பேரின் உடல்களும், கிருஷ்ணாநகர் பகுதியில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன. சிம்லா மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 21 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் சுக்விந்தர்சிங்,

“இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழையால் சேதமடைந்துள்ள கட்டமைப்புகளை சீரமைப்பு செய்ய ஓராண்டு காலம் பிடிக்கும். இங்கு பருவமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள், தண்ணீர் தட குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. மாநிலத்தில் சேதமதிப்புகள் ரூ.10 ஆயிரம் கோடி வரை இருக்கும். இப்பாதிப்புகளைச் சரிசெய்யும் பணி மலை போன்ற பெரும் சவாலாக உள்ளது. மாநில அரசு வெகு விரைவில் சீரமைக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளது”

என்று கூறி உள்ளார்.