டில்லி

காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

ஏராளமான மோசடிகள் செல்போன்கள் மூலம் நடந்து வருகின்றன. பல மோசடி நபர்கள், முறைகேடான வழிகளில் ‘சிம்கார்டு’ பெற்று இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ‘சிம்கார்டு’ விற்பனை செய்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே மோசடிகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு நேற்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம்,

”காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை செய்பவர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.தவிர மொத்தமாக ‘சிம்கார்டு’ விற்பனை செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மோசடிகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 10 லட்சம் ‘சிம்கார்டு’ விற்பனையாளர்கள் உள்ளனர்.  காவல்துறையின் சரிபார்ப்பு பணிக்காக அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும்  ‘சிம்கார்டு’ விற்பனையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மத்திய அரசு இதுவரை 52  லட்சம் செல்போன் இணைப்புகளைத் துண்டித்துள்ளது. மேலும் 67 ஆயிரம் ‘சிம்கார்டு’ விற்பனையாளர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் இருந்து அவர்கள் மீது 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மோசடி செயல்களின் ஈடுபட்ட 66 ஆயிரம் கணக்குகளை ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம், முடக்கி உள்ளது. 

விரைவில் வர்த்தக பணிக்கான செல்போன் இணைப்பு என்ற புதிய இணைப்பு, அறிமுகம் செய்யப்பட்டு. வர்த்தக நிறுவனங்களின் சுயவிவரங்களும், சிம்கார்டை ஒப்படைப்பவர்களின் சுயவிவரங்களும் சேகரிக்கப்படும்.”

என்று கூறினார்.