கமதாபாத்

பிபோர்ஜாய் புயல் தாக்குதலால் குஜராத்தில் மின் கம்பங்கள் சரிந்து 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது.  சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையைக் கடந்தது.

மாலை 6.30  மணி முதல் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையைக் கடந்தது.  நேற்று அதிகாலை 2.30 மணி வரை நீடித்த இந்த கரை கடக்கும் நிகழ்வால் குஜராத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.

பிபோர்ஜாய் புயல் கரையைக் கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான குடிசைகள் அடித்துச்செல்லப்பட்டன.  மேலும் சுமார் 600 மரங்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காற்றில் அடித்துச் செல்லப்பட்டும், மரங்கள் விழுந்தும் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

குஜராத்தின் கட்ச் கடற்பகுதியில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியதால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் கடல்நீர் சூழ்ந்தது.  இந்தப் புயல் கரையைக் கடந்தபோது கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

பிபோர்ஜாய் புயல் கட்ச், சௌராஷ்டிரா பகுதிகளைப் பல மணி நேரம் சூறையாடிய போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.  ஆனால் மரங்கள் சரிந்தது மற்றும் வீடுகள் இடிந்தது உள்ளிட்ட சம்பவங்களில் 23 பேர் காயமடைந்தனர்.  சுமார் 1 லட்சத்துக்கு அதிகமானோர் முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டு இருந்ததால், உயிரிழப்பைத் தடுக்க முடிந்துள்ளது.