தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் டிரோன் கேமரா பறக்க  தடை மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வைத்துள்ளது.

 முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும், இது வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது; இங்கு செந்தில் ஆண்டவர் என்று அழைக்கப்படும் பாலசுப்பிரமணியசுவாமி (சண்முகர்) அருள்பாலிக்கிறார். இந்தத் தலம் சூரபத்மனை வென்ற இடமாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த கோவிலில் தினசரி பல ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து முருகன் அருள் பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில்,  திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன், வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இ மீறினால் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்புகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருக்கோயிலின் முன்புள்ள சண்முக விலாச மண்டபம், உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், வசந்த மண்டபம், பக்தர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் வரிசை, அன்னதானக்கூடம் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

அந்த எச்சரிக்கை பதாகையில், “இத்திருக்கோயில் வளாகத்தில் திரைப்படப்பாடல்களை பாடி நடனம் ஆடுவது, அதை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம். மேற்படி கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் மற்றும் வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுக்கும் பட்சத்தில் செல்போன் அல்லது வீடியோ கேமரா பறிமுதல் செய்யப்பட்டு ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]