தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25ம் தேதி துவங்கியது.

துவக்கத்தில் விட்டு விட்டு பெய்து வந்த மழை, தீபாவளி முடிந்து நவம்பர் 6ம் தேதி ஒரே இரவில் சென்னையில் மட்டும் 20 செ.மீ.ருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்தது.

 

அதி கனமழையால் அதிர்ந்து போன சென்னை சாலைகள் பலவும் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், தொடர்மழை புயல்மழையாக மாறி 11ம் தேதி மாலை வரை கனமழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகள் பலவற்றிலும் நீர் புகுந்தது, மேலும் சாலைகள் பலவும் குண்டும் குழியுமாக ஆனது.

பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை என்றபோதும் மழைகாரணமாக இயங்காமல் இருந்த அலுவலகங்கள் இன்று செயல்பட ஆரம்பித்திருக்கின்றன.

அலுவலகங்கள் மற்றும் முக்கிய வேலை காரணமாக வாகனங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் நிதானமாகவும், கவனமாகவும் பாதிக்கப்பட்ட மற்றும் ஈர சாலைகளில் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை பணியாளர்கள் சாலை மற்றும் வெள்ளநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

1. சாலைகள் குண்டும் குழியுமாகவும் சிதிலமடைந்தும் உள்ளதால் பாதுகாப்பான இடைவெளி விட்டு செல்லவும்
2. வாகனங்களை முந்திச் செல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக நிதானமாக இயக்கவும்
3. சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் வேகமாக சென்று தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.