சென்னை: புறம்போக்கு நிலம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிங்கள், வீடுகள் கட்டுபவர்களுக்கு இனிமேல் குடிநீர் வசதி,  மின் இணைப்பு போன்ற அத்தியாவசிய தேவைகள் வழங்கப்படாது என்று  தமிழகஅரசு நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சென்னை உள்பட பல பகுதிகளில் அரசின் புறம்போக்கு நிலங்கள் மற்றும்  நீர்நிலைகளில் ஆக்கிரமித்து ஒரு தரப்பினர், வீடுகள் கட்டிங்கள், கம்பெனிகள் கட்டி வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்பட அனைத்து வசதிகளையும் எந்தவித முறையான ஆவனமின்றி அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில், புறம்போக்கு, அரசு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழகஅரசுக்கு உத்தரவிட கோரியிருந்தது.

இந்த மனுமீது ஏற்கனவேநடைபெற்ற விசாரணைகளின்போது, புறம்போக்கு  மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை அகற்ற மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதி கேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை , பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தலைமை செயலாளர் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகரமான அல்லது வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பராமரிக்கும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலைகள் உள்ள பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத்துறைக்கு தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாக கணக்கில் கொண்டு அவற்றின் மதிப்பை ஜீரோ என நிர்ணயிக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாரும் பதிவு செய்ய கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்தனர்.