download
பச்சமுத்துவின் எஸ். ஆர்.எம். கல்விக் குழுமம் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கல்லூரி சீட் தருவதாகச் சொல்லி பண மோசடி செய்ததாக பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததாக கல்வி கொள்கைக்கு எதிரான மக்கள் இயக்கம், குற்றம் சாட்டியது.  தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் சில ஆவணங்களை பெற்றது இந்த இயக்கம்.
காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது.  இந்த நிறுவனங்கள், பொத்தேரி ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அவ்வியக்கம் தெரிவித்தது.
srm111
இது பற்றி விரிவான விவரங்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  இதனையடுத்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிரடியாக அரசே இடிக்கப்போவதாகத் தகவல் பரவியது.
இந்நிலையில், அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, இன்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக தரப்பினரே, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அவசரம் அவசரமாக இடித்து வருகிறார்கள்.
முதல் கட்டமாகச் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும்  எஸ்.ஆர்.எம். வளாகத்தின் முன் பக்கம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.  இன்னும் பல கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
srm112
இதை படம் எடுக்க  ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழின் செய்தியாளர்  ஜெயவேல் சென்றார். அவரை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆட்கள், சிறைப்பிடித்தனர்.  அவரிடமிருந்த விலை உயர்ந்த கேமராவை பிடுங்கி படங்களையும் அழித்தார்கள்.
இந்த தகவல் தெரிந்த ஜூ.வி. இதழ் நிர்வாகத்தினர்,   வடக்கு மண்டல ஐ.ஜி.  செந்தாமரைக்கண்ணனிடம் தெரிவித்தனர்.  இதையடுத்து   சம்மந்தப்பட்ட  பகுதி காவல் நிலையத்தினர்,  சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த செய்தியாளர் ஜெயவேலுவை மீட்டனர்.
எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர் பச்சமுத்து வேந்தர், புதிய தலைமுறை ஆகிய இரு தொலைக்காட்சிகளையும் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி ஆகிய இரு வார இதழ்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(படங்கள் நன்றி: விகடன் .காம்)