கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை  மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மக்கள் புரட்சி காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகையில் இருந்து வெளியேறி கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, அதிகாலை விமானப்படை விமானத்தில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு மாலத்தீவு அடைக்கலம் கொடுத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று நாட்டின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இருந்து வந்தார். அதுபோல,கோத்தபய ராஜபக்ச  தனது பதவிக்காலம் முடிவதற்குள்  பதவியில் இருந்து விலகும் முதலாவது ஜனாதிபதியாகவும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.  இவரது குடும்பத்தினரின் ஊழல் காரணமாக, இலங்கை இன்று திவாலாகி உள்ளது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து, கடந்த வாரம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். இதனால், அங்கிருந்து தப்பிய ஓடிய கோத்தபயராஜபக்சே இன்று மாலத்தீவு தப்பிச் சென்றதாக ராணுவம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக்கூடாது என மாலத்தீவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.  அதிகாலை கோத்தபய விமான நிலையத்தில் இருந்து இறங்கி சென்ற்போது, அங்குள்ள க்கள் கோத்தபயவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. எனினும் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அதிபருக்கு எதிராக இலங்கை மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில்  கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர்  தைய்யிப் கோரியுள்ளார். மாலதீவில் கோத்தபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இதனால் கோத்தபயவுக்கு மாலத்தீவு அரசு பலத்த பாதுகாப்பு வழங்கி உள்ளது. மக்கள் எதிர்ப்பு காரணமாக  மாலத்தீவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.