சென்னை: அண்ணாமலைக்கு அரசியல் செய்ய கடவுள்தான் கிடைத்தாரா..? கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று  அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ள தமிழகஅரசின் நடவடிக்கைக்கு இந்துஅமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. தடை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை, வீடுகளின் வாசலில் வைத்து கொண்டாடுவோம் என்று கூறியுள்ளதுடன், தமிழகஅரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இந்த நிலையில், சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்து சமய  அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,

முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, சிறப்பான முறையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவித்து உள்ளதாக  தெரிவித்தவர், பாஜக தலைவர் அண்ணாமலை கடவுகளைக்கொண்டு அரசியல் செய்து வருகிறார். , அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து  அண்ணாமலை அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்.

தமிழ்நாட்டில் நடைபெறுவது   சட்டத்தின் ஆட்சி, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது, பக்கத்து மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை இருந்தும், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.  எனவே அதுபோன்ற சூழ்நிலையை இங்கு உருவாக்க வேண்டாம் என்றும் வீட்டில் இருந்தே, விநாயகரை வழிபட்டாலும், அவர்கள் கோரிக்கையை விநாயகர் ஏற்று கொள்வார்.

கோயில்களில்  முடி காணிக்கை செலுத்துவதற்கு இலவசம் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. பழனி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கலில் முடி காணிக்கை செலுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது என்று கூறியதுடன்,  கோயில்களில் மொட்டையடிக்கும் பணியாளர்களுக்கு உரிய தொகையை வழங்க கோயில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.