மும்பை: வாக்குப்பதிவு நாளன்று, தனது நாயின் உடலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவான வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டி, மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்ட 65 வயதான மோதிராம் செளத்ரி என்பவர் கைது செய்யப்பட்டார்.

மும்பையின் நவ்னாத் நகர் பகுதியில் வசிக்கும் இந்த நபர், அந்தாரே மருத்துவமனையின் அருகே தனது நாயுடன் உலவிக் கொண்டிருந்தார்.

வாக்குப்பதிவு நாளன்று, பிரச்சாரத்தில் ஈடுபடுவது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின்படி குற்றமாகும். ஆனால், அதையும் மீறி இந்த நபர் தனது நாயைப் பயன்படுத்தி வித்தியாசமான முறையில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவான ஸ்டிக்கர்களை ஒட்டி, ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்ததால், இவர் மீது நடவடிக்கைப் பாய்ந்துள்ளது.

இவரது நாயின் உடலில், பாரதீய ஜனதா கட்சியின் சின்னம் மற்றும் “நாட்டைப் பாதுகாக்க மோடிக்கு வாக்களியுங்கள்” என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

மும்பை மாநகராட்சியிடம், சம்பந்தப்பட்ட நாயை பொறுப்பில் எடுத்துக்கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.