சென்னை:

சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர்  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவதுபோல், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் பயிற்றுவிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்த மாத விசாரணையின்போது,  என்சிஇஆர்டி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் கால அளவு, குழந்தைகள் படிக்க வேண்டிய காலம் குறித்தும், 1 மற்றும் 2வது  வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும், 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, வாரத்திற்கு மொத்தமாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் அளவில் வீட்டுப்பாடம் கொடுக்கவும் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்க நீதிபதி கிருபாகரன்,  என்சிஇஆர்டி செயலாளரின் பதில் மனுவை ஏற்பதாக தெரிவித்தார். என்சிஇஆர்டி விதிகளை அனைத்து தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

மேலும், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்சிஇஆர்டி விதிகளின் படி பாடத்திட்டம் தான் கற்பிக்கப்படுகிறதா என்பதை சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

என்சிஇஆர்டி குறிப்பிட்டுள்ள  விதிகளின்படி, 1வது, 2வது வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என்றும்  இந்த உத்தரவு நகல்களை, அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்குக்கும் அனுப்ப வேண்டும் என்றும்  நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.