சென்னை: திமுக எம்.பி. மகன் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நினைத்துப் பார்க்கவே உள்ளம் அஞ்சி நடுங்குகிறது என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும்போது விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே  தடுப்புச் சுவரில் கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதையடுத்து,  திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோவிற்கு திமுகவினர் உள்பட அரசியல் கட்சியினர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  “கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் திரு. என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும்,உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் திரு.என்.ஆர்.இளங்கோவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’,.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.