சென்னை: திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் பொதுஇடங்களில் முக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி  எம்.பி.யுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த காலக்கட்டமான கடந்த 2021ஆம் ஆண்டும் கனிமொழிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது,  2ஆவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்  சென்னையில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.