சென்னை: திமுக எம்எல்ஏவான விக்கிரவாண்டி  புகழேந்தி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல பாமக நிறுவனர் ராமதாசும் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும்,  நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. புகழேந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் திமுகவின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் திமுகவின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி அவர்கள், தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தி அவர்களைச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். திமுக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கி – மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி அவர்களது மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கட்சிக்கும் பேரிழப்பாகும். ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நா.புகழேந்தி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விழுப்புரம் மாவட்ட திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளரும் – விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் புகழேந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கழகப்பணி, மக்கள் பணி இரண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஆற்றல் மிகு செயல்வீரர். அண்ணன் புகழேந்தி அவர்களுடைய மரணம் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். Ads by இத்துயரமான நேரத்தில் அண்ணன் புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்களின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்