டில்லி

திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற விவாதம் நடத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில் மணிப்பூர் கலவர விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என்று கருதப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதற்காக நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இன்று மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. டில்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம்,

“நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து  விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.  மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.  தவிர மணிப்பூர், விவகாரம், பொது சிவில் சட்டம், ஒடிசா ரயில் விபத்து ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்”

என்று தெரிவித்துள்ளார்.