பெங்களூரு

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அமளி செய்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவையில் கூச்சல் எழுப்பினர்.

ஆயினும், இந்த கூட்டத்தொடரில் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  பிறகு சபாநாயகர் காதர், மதிய உணவுக்கு அவையை ஒத்தி வைக்காமல், பட்ஜெட் விவாதத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளதைத் தொடர்ந்து அவையை நடத்தும்படி துணைச் சபாநாயகர் ருத்ரப்பா லாமனியிடம் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி சபாநாயகர் மீது காகிதங்களைக் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கடும், பரபரப்பு ஏற்பட்டது.  சபாநாயகர் காதர் 10 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் அஸ்வத் நாராயணன், வேதவியாச காமத், அரவிந்த பெல்லாட், தீரஜ் முனிராஜூ, யஷ்பால் சுவர்ணா, சுனில் குமார், ஆர். அசோக், உமாநாத் கோட்யான், அரக ஞானேந்திரா மற்றும் பாரத் ஷெட்டி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை. நடப்பு கூட்டத்தொடர் முடியும் வரை சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் காதர் உத்தரவிட்டுள்ளார்.