புதுக்கோட்டை:  ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுக பொறுப்பல்ல, குண்டு வீசியவர் மனநோயாளியாக இருக்கலாம் என தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை மீது  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், திமுக ஆட்சியில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி, இந்த குண்டு வீச்சுக்கு திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ பொறுப்பல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்தவர்,  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை தப்பவிட்டு விட்டதாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டது தவறு என்றும், “அவர்கள் எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகின்றனர் என்று தெரியவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்துவிட்டது தொடர்பான செய்தி அனைத்து பத்திரிகை மற்று ஊடகங்களில் வந்திருக்கிறது” என்றார்.

திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆளுநர்மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர் என்பது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை புகார் கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, 

“தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் மீதும் தொடர்ந்து வெறுப்புணர்வை பரப்பிக் கொண்டிருக்கின்ற முதல் நபர் மரியாதைக்குரிய ஆளுநர்தான். எனவே, நாங்கள் எப்போதுமே ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பவில்லை என்றார்.

இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்களை  தொடங்கியது யார்? என கேளவி எழுப்பியவர்,  ஆளுநர்தான் இதுபோன்று  ஊர் ஊருக்குச் சென்று பிரச்சாரம் செய்கிறார். ஒரு கட்சியினுடைய தலைவரைப் போல, எதிர்க்கட்சித் தலைவரைப் போல அவர்தான், பிரச்சாரங்கள் செய்கிறார்.

ஆனால் ஒன்று, நாங்கள் ஆட்சி செய்கிற இந்த மாநிலத்திலேயே, பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இந்தநேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை எல்லாம் வந்துவிட்டதாகக் கூறுவார்கள். எனவே, திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு பொறுப்பல்ல.

இது ஒரு சம்பவம். இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்திருக்கிறோம். உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். இதில் நாங்கள் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. எங்காவது மனநோயாளி ஒருவர் இதுபோல வீசி சென்றால், அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியுமா?” என எதிர் கேள்வி எழுப்பினார். (குண்டு வீசிய ரவுடி வினோத்தை முதலில் காவல்துறையினர் மதுபோதையில் குண்டு வீசியதாக கூறிய நிலையில், அமைச்சர் ரகுபதி அவரை மனநோயாளி என்று கூறுகிறார்)

தமிழகத்தின் முதல் குடிமகன் குடியிருக்கும் ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லையே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அமைச்சர்,  “ஆளுநர் மாளிகைக்கு எல்லாம் பாதுகாப்பு இல்லை என்று சொல்வதெல்லாம் தவறான ஒன்று. இந்த சம்பவம் ஆளுநர் மாளிகைக்கு  வெளியே நடந்தது. சாலையில் செல்லும் ஒருவர் போகிறபோக்கில் இவ்வாறு தூக்கிப்போட்டுவிட்டு சென்றால், அதற்கு நாங்க  என்ன செய்ய முடியும்?

தமிழக முதல்வரின் ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு இல்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான ஒன்று.

நாங்கள் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு கொடுக்காமல் வேறு என்ன செய்வோம்? அவர்கள் கூறுவது போல், அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர்தானே புகார் அளிப்பார்? நாங்கள் ஏன் அவ்வாறு செய்யப்போகிறோம்?

சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாப்பதில், இந்த அரசு எந்த தவறையும் செய்யாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிரியாக இருந்தாலும் அவரை பாதுகாக்கும் தலைவராகத்தான் இருப்பார்” என்று கூறினார்.