சென்னை: தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது,  வெடிகுண்டு கலாசாரம் பரவுகிறது, அதை தடுக்க வேண்டும். என தேமுக தலைவர்  விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகை மீது நேற்று (25ந்தேதி) ரவுடி கருக்கு வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலுக்கு அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.

இநத் நிலையில்,  சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், வன்மையாக கண்டிக்கத்தக்கது, திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பதிவில் ,  ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, ஆளையே கடித்த கதையாக, தற்போது ஆளுநர் மாளிகையிலேயே வெடிகுண்டு வீசிய செயல், வண்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு, இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். இதுபோன்ற விஷயங்களில், அரசு கவனம் செலுத்தி, வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகாமல், கடுமையான தண்டனை வழங்கினால்தான், இது போன்ற குற்றங்கள் பரவாமல் தடுக்க முடியும். ஆளுநர் மாளிகையிலேயே, வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை பார்க்கும்போது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. எ

னவே முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.