சென்னை: திமுக சார்பில் 72 மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கும், மாவட்ட அளவிலான பல்வேறு பதவிகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதன்படி வேட்புமனுத் தாக்கல் 22ந்தேதி தொடங்குகிறது. மாவட்ட செயலாளர்கள் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டிகள் எழுந்துள்ளதால்,  ஆளுங்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக கட்சி விவகாரங்களில் மாவட்டச் செயலாளர்கள் முக்கியப் பங்காற்றுவதாலும், அவர்கள்தான்  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றுவதாலும், அதை கவனத்தில் கொண்டு, குறைந்தது 15 தற்போதைய மாவட்டச் செயலாளர்களுக்குப் பதிலாக புதிய முகங்கள் நியமிக்கப்படலாம் என கட்சியின் மூத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில்,  மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கு செப்டம்பர் 22 முதல் 25க்குள் கட்சித் தலைமையகத்தில் ரூ.25,000 கட்டணத்துடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆளுங்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் திமுக தலைமையின் குடும்பத்தினரை நோக்கி படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

விரும்பப்படும் பதவிகளைப் பெற கட்சிக்குள் தீவிர லாபி தொடங்கியது. பதவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினாலும், மாவட்ட அளவிலான இரண்டாம் நிலைத் தலைவர்களும் பதவிகளை பிடிக்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதுபோல, கட்சி விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தாத அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளை வகிக்க அனுமதிக்கக் கூடாது சிலர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மாநில  இளைஞரணியை சேர்ந்த பலர் மாவட்டச் செயலாளர் பதவிகளை பிடிக்க இளைஞர்அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவைப் பெறுவதற்காக சென்னையில் முகாமிட்டுள்ளனர்.  இதனால் கட்சிகள் முட்டல் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் பல அதிகார மையங்கள் தோன்றுவதைத் தடுக்கவும், மாவட்டங்களில் கட்சி விவகாரங்களில் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசி வருவதாகவும்,  கட்சி வாக்காளர்களின் ஆதரவின் அடிப்படையில் மட்டுமே பதவிகள் இறுதி செய்யப்படும். தேர்தல் முடிவை தலைமை ஏற்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து, பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணமாக தலைமைக்கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

22-ந் தேதி (வியாழக்கிழமை) கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு, தூத்துக்குடி வடக்கு-தெற்கு, திருநெல்வேலி கிழக்கு-மத்தி, தென்காசி வடக்கு-தெற்கு, விருதுநகர் வடக்கு-தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு-மேற்கு, தேனி வடக்கு-தெற்கு, மதுரை வடக்கு-தெற்கு-மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைக்கழகத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி, ஈரோடு வடக்கு-தெற்கு, திருப்பூர் வடக்கு-தெற்கு, கோவை வடக்கு-தெற்கு-மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு-மேற்கு, தருமபுரி கிழக்கு-மேற்கு, நாமக்கல் கிழக்கு-மேற்கு, சேலம் கிழக்கு-மேற்கு-மத்தி, கரூர், திருச்சி வடக்கு -தெற்கு-மத்தி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம்.

24-ந் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை வடக்கு-தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை)-தெற்கு, தஞ்சை வடக்கு-தெற்கு-மத்தி, கடலூர் கிழக்கு-மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு-தெற்கு, விழுப்புரம் வடக்கு-மத்தி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம்.

25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை)-மத்தி-மேற்கு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு-தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு-தெற்கு, திருவள்ளூர் கிழக்கு-மேற்கு-மத்தி, சென்னை வடக்கு-வடகிழக்கு-கிழக்கு-மேற்கு-தென்மேற்கு-தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்ப படிவம் ரூ.1000 வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, நகரிய, பகுதி, மாநகரச் செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்டச்செயலாளர் உள்பட பதவிகளை பிடிக்க கட்சிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.