சென்னை: சுயமரியாதை திருமண சட்டம் இயற்றியது திமுக அரசு; பாராளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது தி.மு.க. தான் என சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல  திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் இல்லத் திருமணம் சென்னை ஆர்.ஏ.புரம் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. மணமக்கள் ராமன்-அக்ஷயசெல்வி திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது,  சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டம் இயற்றியது திமுக அரசு  என்றவதுடன்,  கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள்.  அதுபோல அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது தி.மு.க. தான். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு தி.மு.க உதவிகள் வழங்கியது என்றதுடன்,  செப்டம்பர் 15-ந்தேதி 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக் கூடிய திட்டமாகத்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்றார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என மணமக்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் பணியை எப்போதும் தொய்வின்றி செய்து வருகிறது தி.மு.க என்றவர்,  எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்கள் பணியை எந்த அளவுக்கு ஆற்றி உள்ளதற்கு ஒரே உதாரணம், கொரோனா காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்க கூடிய வகையிலே, “ஒன்றிணைவோம் வா” என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக மக்களுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுகிறதோ, அவை அத்தனையும் செய்து கொடுத்த ஒரு கட்சி தான் இன்றைக்கு ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடிய தி.மு.க. என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். அதில் முடிந்த அளவுக்கு வெற்றி பெற்றோம் என்று சொன்னால், தங்கப்பாண்டியன் போன்றவர்கள், அவரது தொகுதியிலே உள்ள மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் தலைமை கழகம் மூலமாக நானும் அறிந்தவன்.

தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களைப் பற்றி கவலைப்படுகிற கட்சி தான் தி.மு.க. அதனால் தான் தொடர்ந்து நாம் வெற்றியை பெற்று வருகிறோம். பாராளுமன்ற தேர்தலிலே ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்கு பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலே 6-வது முறையாக நம்முடைய தி.மு.க. ஆட்சி வருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள்.

ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதிலும் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். இப்படி தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப்போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதி மொழிகளை தந்தோம். அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள்.

நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றி காட்டி இருக்கிறோம். இன்னும் சொல்கிறேன் 100-க்கு 99 சதவீதம் இதுவரையிலே நாம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டம் மட்டுமன்றி, விடியல் திட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதற்கு பிறகு புதுமைப் பெண், பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம். அதையும் நிறைவேற்றி இருக்கிறோம். நான் முதல்வன் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் அளவுக்கு பயிற்சி தரும் அளவுக்கு இந்த திட்டம் செயலாற்றி கொண்டிருக்கிறது.

நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்கப் போகிறேன். ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர் என்றவர், மிச்சம் இருக்கக்கூடிய 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக் கூடிய திட்டமாகத்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த தொகையை பெற உள்ளனர். இதில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா, முன்கூட்டியே நடக்குமா என பேச்சு எழுகிறது. எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அதில் வெல்லப்போவது திமுக தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். தற்போது நடந்த இடைத்தேர்தல்களில் கூட இந்தியா கூட்டணிதான் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. நடந்த இடைத்தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை காட்டுகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் நாம் இந்தியாவை காப்பாற்ற முடியும்.

தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை உருவாக்கி தந்தீர்களோ அதேபோல் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலிலும் சிறப்பான வெற்றியை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர், நாடாளுமன்ற தேர்தல்  குறித்த நேரத்தில் வரப்போகிறதா? அல்லது அதற்கு முன்பே வந்து விடுமா? என்ற ஒரு எண்ணம், சந்தேகம் வந்து கொண்டிருக்கிறது. ஆக முன்கூட்டியே வந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.