சென்னை: திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உறுதி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா லேப்டாப் வழங்கப்பட்டது. அத்திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் மற்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அம்மா லேப்டாப்பை உறவினர்களிடம் இருந்து பெற்று பயனடைந்த மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களிடம், அரசு வழங்கிய இலவச லேட்டாப் பயனுள்ளதாக இருந்தது, திமுக ஆட்சி வந்த பிறகு, லேப்டாப் கிடைக்காததால், எத்தகைய தடைகள் ஏற்பட்டன என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் காணொலி வாயிலாகவும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.
பின்னர் மாணவர்களிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மாணவர்கள், பெற்றோர்கள், நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை பிரதிபலித்த அரசாங்கமாக அதிமுக அரசு இருந்தது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல முறை சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், நானும், அதிமுக எம்எல்ஏக்களும் லேப்டாப் வழங்க வலியுறுத்திப் பேசினோம். அப்போதெல்லாம் முதல்வர் அலட்சியமாக இருந்து விட்டு இப்போது கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்.
நாங்கள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து தான் இப்போது திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தது மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை செயல்படுத்தினோம். திமுக ஆட்சியில் அத்திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், திமுக அரசால் காழ்ப்புணர்ச்சியுடன் நிறுத்தப்பட்ட அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். குறிப்பாக மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை எளிய மாணவர்களுக்கும் அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம், மாண்புமிகு அம்மா அரசின் விலையில்லா மடிக்கணினி திட்டம். அரசுப்பள்ளிகள், அரசுக் கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களின் Career Guide-ஆக, Life Shaping Device-ஆக, கல்விக்கான ஆயுதமாக இருந்த மடிக்கணினியை, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் தொடர்ந்து வழங்கி வந்தது எனது தலைமையிலான அதிமுக அரசு. இந்த மடிக்கணினிகளால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, #PricelessScheme_AmmaLaptop தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன்.
அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய விடியா திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள். ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர். அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை?
இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. பொம்மை முதல்வரைப் போன்றே பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு? Election Eyewash-க்காக லேப்டாப் கொடுப்பது போல Drama நடத்தும் உங்களுக்கும், Education Elevation-க்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது மு.க.ஸ்டாலின் அவர்களே! #WhereIsOurLaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள்.
உரிய , முறையான பதில் வருமா திரு. ஸ்டாலின் அவர்களே?
இவ்வாறு கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]