சென்னை:  ‛டிஎம்கே பைல்ஸ்2’ல் 300 பேரின் பினாமி சொத்து விவரங்கள் உள்ள என்று கூறிய அண்ணாமலை, டி.ஆர்.பாலு ஊழல் குறித்து பேசிய மு.க.அழகிரி மீது ஏன் வழக்கு தொடரவில்லை, ஆனால் என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்,  நாங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாpய் மதிப்பிலான டி.ஆர்.பாலு குடும்ப சொத்தை வெளிக்கொண்டு வருவோம் என  நீதிமன்றத்தில் ஆஜரான பின்  செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.   வழக்கு ஆகஸ்டு மாதம் 3வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை, கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி, தமிழ்ப்புத்தா ண்டு அன்று,  ‛டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தி.மு.க.,வினரின் ஊழல் மற்றும் சொத்துப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுகவைச் சேர்ந்த 12 பேரின் சொத்து விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது,  திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என். நேரு,  பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி , அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி,  டி.ஆர். பாலு,  ஜெகத்ரட்சகன் ,துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் ,கலாநிதி மாறன் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என திமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதில் அளிக்க முடியாது என்று கூறிய அண்ணாமலை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

இதனையடுத்து டி.ஆர்., பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கின் 2வது நாள் விசாரணை  இன்று (ஜூலை 14)  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தது. இன்றைய விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவுபடி, பாஜக தலைவர்  அண்ணாமலை ஆஜரானார். அதையடுத்து வழதுக்கு ஆகஸ்டு 3வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,  ‘டிஎம்கே பைல்ஸ்’வெளியிட்ட பிறகு ஆளுங்கட்சியினர் கோபத்தில் உள்ளனர். முதலமைச்சர் உள்பட  அமைச்சர்கள் அனைவரும் பல அவதூறு வழக்குகளை என்மீது தொடர்ந்துள்ளனர் என்றவர்,  கருணாநிதி மகன் மு.க. அழகிரி மதுரையில் பேட்டியளித்த போது, டி.ஆர். பாலு ஊழல் செய்தது குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த பேட்டியில்  நான் சொன்னதை தான் அவரும் கூறியிருந்தார். ஆனால், அழகிரி மீது பாலு அவதூறு வழக்கு தொடரவில்லை. என் மீது மட்டும் தொடர்ந்துள்ளார் என்றார்.

மேலும்,  டி.ஆர்.பாலுஇ, நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த சத்திய பிரமாணத்தில் 3 நிறுவனங்களில் பங்கு தாரராக உள்ளேன் எனக்கூறியுள்ளார். ஆனால், ‛டிஎம்கே பைல்சில்’ அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்து உள்ளது தெளிவாக கூறப்பட்டு உள்ளது. பாலு, அவரது மகன் ராஜா, மற்றொரு மகன் ராஜ்குமார் ஆகியோர் எந்தெந்த நிறுவனங்களின் பங்குதாரர்களாக உள்ளனர். ஆனால், சத்திய பிரமாணத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. பாலு தாக்கல் செய்த மனுவில் அவரது சொத்துகள் தொடர்பான பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. பாலு 2004 -2009 ல் ஊழல் செய்ததால் தான், அதற்கு பிறகு மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.

எந்த குடும்பத்தையும் அரசியலில் இழுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. எங்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க டிஆர் பாலு குடும்பத்தினர் அனைவரையும் நீதிமன்ற கூண்டில் ஏற்ற வேண்டும். இதனை நீதபதியிடம் வலியுறுத்துவோம் . அவர்களிடம் நாங்கள் கேள்வி கேட்க வேண்டும். எங்களிடம் அவர்கள் கேள்வி கேட்கலாம். நாங்கள் எப்போதும் இங்கு இருப்போம். நெஞ்சவலி எனக்கூறி மருத்துவமனையில் அனுமதித்து நாடகம் ஆட மாட்டோம் என்றார்.

தற்போது நடைபெறுவது,  வாரிசு அரசியலால் உருவான 3ம் தலைமுறையினருக்கும், முதல் தலைமுறையினருக்கும் நடக்கும் யுத்தம். ஊழலுக்கு எதிரானவர்கள் எங்களுடன் இணைய வேண்டும். இந்த யுத்தம் ஓரிரு நாட்கள் நடப்பது கிடையாது. நீண்ட யுத்தம். அவர்களிடம் அதிகார பலம், பண பலம் உள்ளது என்றவர்,

‛டிஎம்கே பைல்ஸ்’ 2வது பாகம் தயாராக உள்ளது. அதில் 300 பேரின் பினாமி சொத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதை மக்கள் நீதிமன்றத்தில் வெளியிடுவதா அல்லது கவர்னரிடம், சிபிஐ முன்பு அளிப்பதா என விசாரித்து வருகிறோம் என்றார். இதை,  பாஜக நடத்தும் பாத யாத்திரைக்கு முன்பு வெளியிட ஆலோசிக்கிறோம். பாத யாத்திரையின் போது 3 மற்றும் 4வது பாகம் வெளியே வரும்.

இவ்வாறு கூறினார்.