சென்னை

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை முதல் தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம்   மேற்கொள்கிறது.

இன்று  தி.மு.க. தலைமை அலுவலகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

”முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்க்கண்ட அட்டவணைப்படி பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள் ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப் பெறுவார்கள்.

அதன்படி, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, நாளை (5-ம் தேதி) தூத்துக்குடிக்குச் செல்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளைக் கேட்கின்றனர். 

6-ம் தேதி கன்னியாகுமரி, 7-ம் தேதி மதுரை, 8-ம் தேதி தஞ்சாவூர், 9-ம் தேதி சேலம், 10-ம் தேதி கோவை, 11-ம் தேதி திருப்பூர், 16-ம் தேதி ஓசூர், 17-ம் தேதி வேலூர், 18-ம் தேதி ஆரணி, 20-ம் தேதி விழுப்புரம், 21,22,23 ஆகிய தேதிகளில் சென்னை, ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். 

இந்த நகரங்களுக்குக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு வருவதற்கு முன்பாக, இக்குழு வருவதை உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதோடு, கோரிக்கை மனு பெறுவதற்கான இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” 

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.