டில்லி,

புதிய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தாள்களில் தேவநாகரி எண்களை பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா இப்பிரச்னையை எழுப்பினார்.

அப்போது பேசிய அவர், புதிய பணத்தாள்கள் தேவநாகரி எண்களுடன் வெளியாகியிருப்பது அரசியல் சட்டத்துக்கு முரண்பாடானது என்று குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச அளவில் பயன்பாட்டில் இருக்கும் எண்கள்தான் பயன்படுத்தவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

தேவநாகரி எண்களில் வெளியிடப்பட்டிருக்கும் பணத்தாள்களை திரும்பபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பிறகுதான் தேவநாகரி எண்களை பணத்தாள்களில் பயன்படுத்த முடியும் என்று கூறிய திருச்சி சிவா, ஹிந்தி மொழி பேசுபவர்கள் மற்றவர்களை தனிமைப்படுத்தும் செயல் என்று கண்டித்தார்.