தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 28-ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என்றும்
திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 30 ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 27-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82605) எழும்பூர் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என்றும் இதேபோல், திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06006) மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் எனவும் கூறியுள்ளது.
சென்னை சென்ட்ரல் இருந்து அடுத்த மாதம் 28-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (82621) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (82622) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 27 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06016) மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் 28 ஆம் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06015) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 21 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06033) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 23 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06034) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வேயின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.