சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சென்னையில் இருந்தும், அதுபோல தமிழகம் முழுவதும்  இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களிலிருந்து 10,940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ( 24-ந் தேதி)  26-ந் தேதி வரை, 3  நாட்களுக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதே போன்று பிற ஊர்களுக்கு இடையே  8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்த பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து, சென்னை காவல்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தையும் சேர்ந்து மொத்தம் 6 இடங்களில் இருந்து அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து 26-ஆம் தேதி வரை பேருந்து இயக்கப்படுகின்றன. இதனால், வியாழக்கிழமை (அக். 24) முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்:

இங்கிருந்து வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களுர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

மாதவரம் பேருந்து நிலையம்:

இங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைக் கடந்து செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்,சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் அரசுப் பேருந்து பணிமனையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.


தற்காலிக பேருந்து நிறுத்தும் இடங்கள்: 

இதேபோல, இந்த 3 நாள்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரக் கூடிய அரசுப் பேருந்துகள், வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், வானகரம் சுங்கச்சாவடி, பூந்தமல்லி, நெற்குன்றம் , மதுரவாயல் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம் போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்குள் அனுமதிக்கப்படும்.

இதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்கெட்  சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து வெளிவட்டச் சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று, அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.

ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் புறவழிச்சாலை, 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு தடை: நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரையும், 28-ஆம் தேதியும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த நாள்களில், பிற்பகல் 2 மணி முதல் அதிகாலை  2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன.

அந்த நேரத்தில் அங்கிருந்து வரும் வாகனங்கள், வண்டலூர் பாலம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரி சி.டி.எச். சாலையை அடைந்து, பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை, மாதவரம் ரவுண்டானா அடையலாம்.

திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரேத்பேட்டையில் இடதுபுறம் திரும்பி வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லலாம்.

இதேபோல 100 அடி சாலையில், பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பாலம் சந்திப்பில் சி.டி.எச். சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-ஆவது அவென்யூ, 2-ஆவது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

போக்குவரத்து மாற்றம்:   கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது பிரதான சாலை, 2ஆவது அவென்யூ சாலை, எஸ்டேட் சாலை, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

அதேபோல வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாக செல்லலாம்.

பொதுவாகவே தாம்பரம், பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாகச் செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.