டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று சவுதாலாவுக்கு, 4 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநில முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதலா. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில்தான் பிளஸ்2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் அரியான மாநில முதல்வராக பதவி வகித்த 1999ம் ஆண்டு முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில்,  தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், கடந்த 2010ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், ஒம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து, இன்று ஓம் பிரகாஷ் சவுதாலா உள்பட வழக்கில் தொடர்புடைய சிலருக்கும், தண்டனை விவரங்களை டெல்லி ரோஸ் அவெனியூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேலும் அவரது 4 சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.