திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், காத்திருப்பு அறையில் நேரம் வீணாகாமல், நேரடியாக சாமி தரிசனம் செய்யும் வகையில் பக்தர்களை மார்ச் 17 முதல் அனுமதிக்கவுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

இந்த நடைமுறை, இன்று முதல் மார்ச் 31ம் தேதிவரை பின்பற்றப்படவுள்ளதாய் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், தர்ம தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தர்ம தரிசன நேரடி ஒதுக்கீடு, ரூ.300 விரைவு தரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீடு தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்கள், தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டைய தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்தான், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும், ஆர்ஜித சேவைகளான விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்ஸவம் உள்ளிட்ட சேவைகளை மார்ச் 31ம் தேதி வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதால், இந்த டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதற்கு பதிலாக விஐபி பிரேக் தரிசன அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.