சென்னை: ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 காலிப்பணியிடங்களை கணினி தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான  அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 காலிப்பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய கணினி வழி எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும்,  இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள் உள்ளன.  இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். மேற்கண்ட பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.57,700 – 2,11,500, ரூ.56,100 – 2,08,700, ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுத் துறையின் கீழ் தலைமைச் செயலக நூலகம் நூலக உதவியாளர் 2 இடங்கள், பொது நூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள்.

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. மேற்கண்ட பதவிகளுக்கு மாதம் ரூ.35,400 – 1,30,400, ரூ.19,500 – 71,900 சம்பளமாக வழங்கப்படும். நூலகத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திவர்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மார்ச் 6 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.1 மணி முதல் மார்ச் 8 ஆம் தேதி இரவு 11.59 வரை திருத்தம் செய்யலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மே 13 ஆம் தேதி காலை முதல் தாள் தேர்வும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.