மதுரை:  அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? அதிமுக அழிந்து போகும் என கூறிய அழகிரி இப்போது அரசியலிலே இல்லை என தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  விமர்சித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அனல்பறக்கும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினிர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகியதுதான், அதிமுக தலைவர்கள் பாஜகவை விமர்சிப்பதும், பாஜக தலைவர்கள் அதிமுகவை விமர்சிப்பதுமாக  இருந்து வருகிறது. இந்த நிலையில்,  கோவை மாவட்ட பாஜக வேட்பாளரான, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சமீபத்தில்  அதிமுக இன்னும் சில ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று பேசியிருந்தார்.

இதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவதுடன், அண்ணாமலை மற்றும் பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதுபோல, தெர்மோகோல் புகழ், முன்னாள் அமைச்சராக செல்லூர் ராஜுவும் அண்ணாமலையின் பேச்சுக்கு  பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு,  மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் அண்ணாமலை பேசி வருவதாகவும் அதிமுக அழிந்து போகும் என கூறிய அழகிரி இப்போது அரசியலிலே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? என்றும் அவர் கேள்வி  எழுப்பி உள்ளார்.