சென்னை: டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்து உள்ளது.

தமிழகஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒய்வூதியம் பணப்பலன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டம் அறிக்கப்படுவதும், பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 14வது ஊதிய ஒப்பந்தம்,   காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் டிசம்பர் 13-ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், சம்மேளனம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பிரச்சினைகளையும், அரசின் செயல்பாடுகள் குறித்தும்  விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,

அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

கூடுதல் நேரம் பணி செய்யும் ஓட்டுநர், நடத்துநருக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும்.

நடத்துநர் இல்லா பேருந்து சேவையை நிறுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் 2020 மே மாதம் முதல்வழங்கப்படவில்லை; அதை வழங்க வேண்டும்.

அதேபோல், 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

போக்குவரத்து விதிமீறல் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் உள்பட பல  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி டிசம்பர் 13-ம் தேதி அரசு போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.