திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், தைப்பூச திருவிழா 10 நாட்களும் மண்டபப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, ஜனவரி  14 பொங்கல் முதல் 18ந்தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழகஅரசு அறிவித்தது.

இந்த நிலையில், பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி ஜனவரி 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை என்றும் 21ம் தேதி நடைபெறும் தெப்ப உற்சவத்திலும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து எனவும் தெரிவித்துள்ளார்.  நாளை பக்தர்கள் இன்றி கொடியேற்ற விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.

தைப்பூச திருவிழா 10 நாட்களும் மண்டபப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை. ஜனவரி 14 முதல் 18 வரை 5 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தைப்பூச திருவிழா முழுவதும் வலைத்தளம், யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.