விருதுநகர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் பிப்ரவரி 26ந்தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. மாதா மாதம் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சுக்ல பட்சத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக போற்றப்படுகின்றது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 அன்று கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் சிவ ஆலயங்கள், முருகன் ஆலயங்கள் உள்பட பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நிலையில், மகாசிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி அம்மாவட்ட வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அத்துடன், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பதினெண் சித்தர்கள் சதுரகிரி மலையில் வாழ்ந்ததாக கூறப்படு கிறது. இதனால் இம்மலை சித்தர்கள் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. சதுரகிரி மலையில் உள்ள சந்தன மகாலிங்கம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள லிங்கம் சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுவதால் சந்தன மகாலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. சதுரகிரி மலையில் உள்ள கல்லால மரம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி மூலவர் சன்னதியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மன் சன்னதியில் ஆனந்தவல்லி அம்மன் அருள்பாலிக்கிறார். மலைப்பாதையில் சந்திரகாந்தேஸ்வரர், சங்கரநாராயணர், ராமதேவர், வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர் போன்ற பல தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், பிரதோஷம், மாசி மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளன.